தமிழ் சினிமாவின் சகாப்தம் : பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்..!

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மகேந்திரன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 79.

இயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். நடிகராகவும், அவதாரம் எடுத்த மகேந்திரன், விஜய் நடித்த ‘தெறி’, ரஜினியின் ‘பேட்ட’, நிமிர், பூமராங் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார். இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு ஏராளமான திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று மாலை 5 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response