ஆதி ஹன்சிகா இணையும் “பார்ட்னர்”..!

நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும்.
RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான “பார்ட்னர்” என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் ‘மகா’ நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் பார்ட்னர் படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர்  குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் படத்தின் பெரும் பில்லர்களாக பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், vtv கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, ‘டைகர்’தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர்.
டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது,
“இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது.
படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கரியரில் முக்கியமான படமாக இருக்கும். மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். இந்தப் பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்” என்றார். இன்று பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

Leave a Response