அதிமுக தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு..!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக முன்வந்தது. இதை தேமுதிக ஏற்கவில்லை. பாமகவுக்கு இணையாக தொகுதிகள் வேண்டும், அதோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை அதிமுக அடியோடு நிராகரித்தது.

இருப்பினும் பாஜ தலைவர்களின் நெருக்கடியால், தேமுதிகவை தன் பக்கம் இழுக்க தொடர் பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டது. 6ம் தேதி பிரதமர் மோடி வரும்போது விஜயகாந்த்தை எப்படியும் மேடை ஏற்றி விட வேண்டும் என்ற நோக்கில், 5ம் தேதி விஜயகாந்த் வீட்டுக்கே சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே, திமுகவுடனும் கூட்டணி தொடர்பாக தேமுதிகவினர் பேசினர். இது அதிமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், கூட்டணி குறித்து நேற்று மாலைக்குள் தேமுதிக முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் தேமுதிக தனியாகவோ அல்லது வேறு கட்சியுடன் கூட்டணிக்கோ செல்வதில் எங்களுக்கு எந்தஆட்சேபனையும் இல்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய, இன்னும் 9 நாட்களே உள்ளது. எனவே இன்று மீண்டும் அதிமுக, தேமுதிக இடையே சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக-விற்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Response