ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் கார்த்தி நடிக்கும் புதிய படம்..!

கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. “K19”  என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம்,  எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக  உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து குடும்பத்தினரிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
 
இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். காதல், காமெடி என ‘ரெமோ’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. 
 
இதில் ரஷ்மிகா மண்டன்னா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளதை தொடர்ந்து , கார்த்தி-க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகவுள்ளார். 
 
இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், கலை இயக்குநராக ஜெய், சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், எடிட்டராக ரூபன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு புரொடக்‌ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்றி வருகிறார். நிர்வாக தயாரிப்பு அரவிந்த்ராஜ் பாஸ்கரன். முதற்கட்ட பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது இப்படக்குழு. படப்பிடிப்பு மார்ச் 2-ம் வாரத்திலிருந்து தொடங்க உள்ளது. 
 
‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ போன்ற படங்கள் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படங்களை மிக கச்சிதமாக செய்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தற்பொழுது, ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் பெயரிடப்படாத “K18” படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. 

Leave a Response