ஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதி போராளிகள்..!

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’.. குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஜிப்ஸி படத்தின் படபிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இப்படத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் எளிய மனிதர்களின்  குரலாகவும், கள போராளிகளின் குரலாகவும்,‘ வெரி வெரி பேட் ..‘ எனத் தொடங்கும் பாடல் ஒன்றை யுகபாரதி எழுதியிருக்கிறார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இந்த பாடலுக்கான ப்ரமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் படமாக்க திட்டமிட்டபோது, தமிழ் சமூகத்தில் உண்மையாகவே களத்தில் போராடும் போராளிகள் இந்த பாடல் காட்சியில் இடம்பெற்றால் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று எண்ணினார்கள். அதைத் தொடர்ந்து   தோழர் நல்லக்கண்ணு, தோழர் திருமுருகன் காந்தி, தோழர் முகிலன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சுற்றுசூழலியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ப்யூஷ் மனுஷ், திருநங்கைகளின் உரிமைக்காக போராடும் க்ரேஸ் பானு, ஆதி தமிழர் பேரவையைச் சோர்ந்த தோழர் ஜக்கையன்,   தோழர் வளர்மதி ஆகியோரை சந்தித்து அனுமதி கேட்டனர். அதற்கு அவர்களும்  மனமுவந்து ஒத்துழைப்பு அளித்தனர்.
இவர்கள் அனைவரும் பங்குபெற்ற படபிடிப்பு சென்னையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்றது இவர்களுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்அவர்களும் கலந்து கொண்டார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு படத்தின் ப்ரமோ பாடலுக்காக வெளிபுறப்  படபிடிப்பில் கலந்து கொண்டு, நடித்து ஒத்துழைப்பு கொடுப்பது இது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது,
இதன் படபிடிப்பின் போது தொன்னூறு வயதைக் கடந்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் படபிடிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பை அளித்ததுடன், வித்தியாசமான முறையில் விளிம்பு நிலை மக்களுக்கான சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் இந்த பாடலுக்கு தங்களாலான உதவியை மனமுவந்து அளிக்க வந்த ஏனைய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கள போராளிகளுடன் இணைந்து கலந்துரையாடியது அனைவரையும் கவர்ந்தது.
பெரிய அதிர்வை ஏற்படுத்தவிருக்கும் இந்த படத்தின் ப்ரமோ பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Response