டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் – அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!

டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் எனவும் அதற்கு முன்னோட்டம்தான் செந்தில் பாலாஜி எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள் என டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில், “நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானதுதான். துரோகத்தை வேரறுக்க தியாகத்தால் அணிவகுப்போம். ஒரு சிறு குழு விலகி செல்வதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மீண்டும் இணைய அழைக்கும் துரோக கூட்டத்திற்கு செல்லக்கூடாது.

அமமுகவின் எழுச்சியை தடுத்து வளர்ச்சியை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளது. அமமுகவை அழிக்க நினைப்பவர்கள் உயர் மின் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் எனவும் அதற்கு முன்னோட்டம்தான் செந்தில் பாலாஜி எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், ராமாயணத்தில் கைகேயி புலம்பியது போல டிடிவி தினகரன் உச்சகட்டமாக புலம்பியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நாளைக்கே இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Response