இளம் தலைமுறையினரின் கனவு கண்ணனாக மாறியிருக்கும் – ஹரிஷ் கல்யாண்..!

ஹரிஷ் கல்யாண் இளம் தலைமுறையினரின் கனவு கண்ணனாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.
“சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு  செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது. நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன” என்று லடாக் படப்பிடிப்பு அனுபவங்களை கூறுகிறார் ஹரிஷ் கல்யாண்.
மொத்த படக்குழுவும் லடாக்கின் அழகான இடங்களில் ஒரு சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டியிருந்தது. அவை மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தது. ஹரிஷ் கல்யாண் அந்த தருணங்களை நினைவு கூறும்போது, “ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்து முடித்தோம். திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக  மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும் வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது” என்றார்.
இன்னொரு சவாலான சம்பவத்தை பற்றி கூறும்போது, “இன்னொரு கடினமான சூழ்நிலையாக இருந்தது உயரமான பகுதிகளில் மலையேற்றம். நான் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ரோஹ்தாங் பாஸின் பின்னணியில் படம்பிடிக்கப்பட வேண்டியிருந்தது. அது, உயரமான இடத்தில் இருந்தது. உள்ளூர்வாசிகள் யாரும் எங்களுடன் வர விரும்பவில்லை, எங்களையும் கூட எச்சரித்தனர். இருப்பினும், ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிப்பதிவாளர் கவின் ஏற்கனவே அந்த இடங்களுக்கு வந்திருந்தனர்.
காட்சிக்கு ஏற்ற  அற்புதமான அழகிய பின்னணியை கொண்டிருப்பதாக உறுதியளித்தனர். ஆரம்பத்தில், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையை பற்றி கண்டு கொள்ளவில்லை. ரஞ்சித் பயணத்தைத் தொடர என்னை ஊக்குவித்தார், கிட்டத்தட்ட 2 மணிநேரம் மலையேறினோம். இறுதியாக, அங்கு முதல் ஆளாக நான் சென்று சேர்ந்தேன். அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது, மொத்த குழுவுமே அந்த இடத்தின் அழகால் மெய் மறந்து, பட்ட கஷ்டங்களை மறந்து விட்டனர்” என்றார் ஹரீஷ் கல்யாண்.

Leave a Response