கையில் தானே வைத்திருக்கிறேன் குடிக்கவில்லையே – அயோக்யா விஷால் பதில்..!

அயோக்யா பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் பீர் பாட்டில் வைத்திருந்தது தொடர்பாக நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

சண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் அயோக்யா. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில் ஜீப் ஒன்றின் மீது அமர்ந்திருக்கும் விஷால் கையில் பீர் பாட்டில் இருந்தது சர்ச்சையை உண்டாக்கியது. இந்த போஸ்டருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அயோக்யா பட போஸ்டர் விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன்.

நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Response