சர்கார் கட்டவுட்டை தொட்டால் வெட்டுவேன் : மிரட்டிய வெறியர்களை பிடிக்க போலீஸ் தேடுதல் வேட்டை..!

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தின் போஸ்டர்களை கிழிக்க யாராவது வந்தால் அவர்களை வெட்டி விடுவேன் என்று கூறி அரிவாளை வைத்து இரு நபர்கள் மிரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில், வைரலாக சுற்றி வந்த நிலையில், அந்த நபர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை துவக்கியுள்ளது.

சர்கார் திரைப்படத்தில் அதிமுக மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, அதிமுகவினர் சமீபத்தில் போராட்டங்களை நடத்தினார்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு, விஜய் ரசிகர் என்ற பெயரில், அதிமுகவினரை எச்சரிக்கும் தொனியில் அரிவாளை வைத்து சுழற்றியபடி இருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர்.

இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில், இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

ஒரு திரைப்படத்திற்காக உயிரை கொல்வேன் என்பது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் விதைப்பது மோசமான நடவடிக்கை, இது குறித்து படக்குழுவினர் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த வன்முறை வெறியர்கள் இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரகாஷ் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், பத்திரிக்கை தொலைக்காட்சி, மற்றும் இணைய தளங்களான யூடியூப், வாட்ஸ்அப் போன்றவற்றில் செய்தியாக வெளியான ஒரு வீடியோவில், தங்களை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு, அடையாளம் தெரியக்கூடிய, ஆனால் பெயர் தெரியாத நபர்கள், அரிவாளை கையில் வைத்துக்கொண்டு சுழற்றியபடி கழுத்தை அறுத்து கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேற்படி நபர்களைப் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு கணினி வழி குற்றப் பிரிவில், 044-23452348, அல்லது 044-23452350 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Response