மு.க.ஸ்டாலினை சந்தித்த சந்திரபாபு நாயுடு : மோடியை விட முக.ஸ்டாலின் சிறந்தவர் என புகழாரம்..!

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் “மோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர்” என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதில் அளித்துள்ளார்.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். இதனையடுத்து வரும் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கூட்டணியை சந்திரபாபு நாயுடு உறுதி செய்தார்.

இந்நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய முக.ஸ்டாலின், “பாரதிய ஜனதாவை எதிர்த்து, நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய அளவில் அமையும் கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் ஆட்சியை அகற்றும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார், அதில் பல மாநில முதல்வர்கள், பல கட்சிகளின் தலைவர்கள் இணைகின்றனர். எனவே மனப்பூர்வமாக இதற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருக்கிறேன்” என்றார். மேலும் இதுதொடர்பாக தலைவர்கள் அனைவரும் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “நாட்டில் ஜனநாயகம் மிக முக்கியம். வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் நலனுக்காக ஒன்றாக பயணிக்க வேண்டியிருக்கிறது” என்றார். பின் தேசிய அளவிலான கூட்டணியை அமைக்க முயற்சிக்கிறீர்கள். யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்விக்கு “ஏராளமான தலைவர்கள் இருக்கிறார்கள். மோடியை விட முக.ஸ்டாலின் சிறந்தவர். எங்கள் அளவில் அனைவருமே வலிமையான தலைவர்கள்தான்” என்றார். மேலும் இந்த கூட்டணி முகத்தின் அடையாளம் நீங்களா என்ற கேள்விக்கு “இல்லை. இந்த கூட்டணியின் முகம் நான் கிடையாது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் தலைவராக விரும்புபவன் அல்ல. நான் செயற்பாட்டாளன் மட்டுமே. அனைவரையும் ஒருங்கிணைப்பேன். முடிவு செய்து, முன்கொண்டு செல்வோம்” என்று சந்திரபாபு நாயுடு பதில் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் தேசிய அரசியலின் நகர்வுகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, திமுக பொருளாளர் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response