நயன்தாரா-வாக ஆசைப்படும் அதிதி மேனன்..!

அமீரின் சந்தனதேவன் படத்திற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் சமூகவலைதளம் பக்கமே செல்லாமல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார் நடிகை அதிதி மேனன்.

தமிழில் பட்டதாரி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த அதிதி மேனன். அப்படத்தைத் தொடர்ந்து அமீரின் இயக்கத்தில் சந்தனதேவன் படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் ரிலீசாகாத நிலையில், தற்போது அட்டக்கத்தி தினேஷ் ஜோடியாக அவர் நடித்த களவாணி மாப்பிள்ளை படம் ரிலீசாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தனது அனுபவங்கள் குறித்து அவர் பேசியதாவது:-

களவாணி மாப்பிள்ளை திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் தியேட்டருக்கு சென்று மக்களுடன் அமர்ந்து பார்த்தேன். நிறைய இடங்களில் அவர்கள் கைத்தட்டி சிரிக்கும் போது சந்தோஷமாக இருந்தது.

எதிர்பாராதவிதமாக தான் சினிமாவுக்குள் வந்தேன். பட்டதாரி படம் பண்ணும்போது எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அதிர்ஷ்டவசமாக எனது இரண்டாவது படமான சந்தனதேவன் அமீர் சார் இயக்கத்தில் அமைந்தது. அதன் பிறகு ஒரு பெரிய படத்தில் கமிட் ஆனேன். ஆனால் அதன் படப்பிடிப்பு சரியான நேரத்தில் தொடங்காததால், அதில் இருந்து விலகி மலையாள படம் ஒன்றில் நடித்தேன். களவாணி மாப்பிள்ளை எனக்கு நான்காவது படம். ஆனால் இரண்டாவதாக ரிலீஸ் ஆகியிருக்கிறது. தற்போது ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

எனக்கு எல்லா மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க பிடிக்கும். சந்தனதேவன் ரிலீஸ் ஆவதற்கு தாமதமாவதால், என்னுடைய முகத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்கு ஒரு கமர்சியல் படம் தேவைப்பட்டது. அதனால் தான் களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்தேன்.

அதற்காக கமர்சியல் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றில்லை. எல்லா படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் பரிசோதனை செய்ய தான் நான் விரும்புகிறேன்.

சந்தனதேவன் படம் எனக்கு நிறைய பாடங்களை கற்று தந்தது. படங்களை எப்படி தேர்வு செய்வது, எப்படி நடிப்பது என்பது உள்பட நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். குறிப்பாக தமிழ் பேச கற்றுக்கொண்டேன். இப்போது நானே டப்பிங் பேசும் அளவுக்கு தமிழ் தெரியும்.

களவாணி மாப்பிள்ளை படத்தில் எனக்கு நானே டப்பிங் பேச ஆசைப்பட்டேன். ஆனால் லேசாக மலையாளம் கலந்து பேசுவதால், இயக்குனர் வேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர் எனது தோழி கதாபாத்திரத்திற்கு நான் தான் டப்பிங் பேசினேன். விரைவில் எனக்கு நானே டப்பிங் பேசுவேன்.

களவாணி மாப்பிள்ளை படத்தில் என்னுடைய அறிமுகக் காட்சியே ரேஸ் பைக் ஓட்டுவது போன்றது. அதற்காக பைக் ஓட்டக் கற்றுக்கொண்டேன். ரேஸ் பைக் என்பதால் முதலில் பயமாக இருந்தது. பிறகு எப்படியோ நன்றாக பைக் ஓட்டி பாராட்டு வாங்கினேன். அதேபோல இந்த படத்துக்காக கொஞ்சம் வெயிட் போட்டேன்.

நயன்தாரா போல் உயர வேண்டும் என்பது தான் எனது ஆசை. அந்த இடத்துக்கு வந்துவிட்டால் நமக்கு தேவையான கதாபாத்திரத்தை நாமே தேர்வு செய்யலாம். ஆனால் இப்போதைக்கு நான் வரிசையில் காத்திருக்கிறேன். அவர்கள் தான் நம்மை தேர்வு செய்ய வேண்டும்.

Leave a Response