நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது, தேசதுரோக வழக்கும் ரத்து – சென்னை கோர்ட் அதிரடி..!

நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கையும் நீதிபதி ரத்து செய்து விட்டார்.

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிராக நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் மீது விசாரணை நடந்தது. நக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார்.நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பு பல முக்கியமான வாதங்களை முன்வைத்தனர்.

124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை. ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை. ஜனாதிபதி, ஆளுநரின் பணிகளைத் தடுத்தால்தான் 124 போட முடியும். ஆனால் இந்த கட்டுரை அப்படி இல்லை. கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்று விளக்க வேண்டும். நக்கீரன் கோபாலைக் கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா.

கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவரது செயலாளர் வழக்கு கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும், என்று கோபால் தரப்பு வாதிட்டது.

இதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடர ஆளுநரின் ஒப்புதலை அவரது செயலாளர் பெற்றாரா என்று கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதி கோபிநாத் தற்போது தீர்ப்பளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்:

– நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது.

– நக்கீரன் கோபால் மீது சுமத்ப்பட்ட 124 வது பிரிவின் கீழான வழக்கை ஏற்க முடியாது.

நீதிபதியின் அதிரடி உத்தரவால் நக்கீரன் கோபால் விடுதலையாகி வெளியே வருகிறார்.

Leave a Response