அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்..!

ஒரு நல்ல கதையை குடும்பத்தோடு பார்க்கும் விதத்தில் படங்களை கொடுப்பதில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் இயக்குனர் கண்ணன். இந்த பொறுப்பு தான் தணிக்கை அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளையும், நற்சான்றிதழ்களையும் பெற்றுத் தந்திருக்கிறது. 
 
பூமராங் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் கண்ணன் அது பற்றி கூறும்போது, “ஆம், அது உண்மை தான், அதே நேரத்தில் மிகவும் வித்தியாசமான பணி. ஒரு பரபரப்பான, நல்ல கதையை வைத்துக் கொண்டு, உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை கலந்து அவர்கள் ரசிக்கும் படத்தை கொடுப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக நான் அது தான் இன்றைய தேவை என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்” என்றார்.
 
“பூமராங்கின் கதை என் மனதில் எழுந்த உடன் அதை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என் மனதில் உடனடியாக எழுந்தது. சில சமயங்களில் உலகளாவிய கதை, ‘யு/ஏ’ சான்றிதழால் அனைவரையும் சென்று சேர முடியாமல் போக அதிக சாத்தியக்கூறுகள் இருக்கிறது. எனவே இந்த உறுதியான முடிவை பூமராங் படத்தின் திரைக்கதை எழுதும்போதும், படப்பிடிப்பின் போதும் என் மனதில் நினைத்துக்கொண்டேன்” என்றார் இயக்குனர் கண்ணன்.
 
கோலிவுட் ஸ்ட்ரைக்கையும் தாண்டி, மிகவும் குறுகிய காலத்தில் படத்தை முடித்திருக்கிறார் கண்ணன். இமைக்கா நொடிகள் படத்தில் கிடைத்த பிரமாதமான வரவேற்புக்கு பிறகு, அதர்வாவின் நடிப்பில் பூமராங் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது என்றால் மிகையல்ல. மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சதீஷ் போன்ற திறமையான நடிகர்களுடன், ரதன் இசையும், பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் படத்தை இன்னும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 
 
மசாலா பிக்ஸ் என்ற தன்னுடைய சொந்த பேனரிலேயே இந்த படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

Leave a Response