ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களம் தான் ‘சண்டி முனி’..!

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட  நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்துள்ள படம் ‘சண்டி முனி.’

இந்த படத்தில் கதாநாயகனாக நட்டி நட்ராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.

மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசு விக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர், அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ள செந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – செந்தில் ராஜகோபால், இசை – ரிஷால் சாய், படத் தொகுப்பு – புவன், கலை இயக்கம் – முத்துவேல், பாடல்கள் – வா.கருப்பன், நடன இயக்கம் – பிருந்தா, தினேஷ், சிவா லாரன்ஸ், சிவா ராக், சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை – குமார், தயாரிப்பு – சிவம் மீடியா ஒர்க்ஸ்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் ‘முனி 3’, ‘காஞ்சனா-2’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடை பெற்று முடிவடைய உள்ளது.

இந்தப் படம் பற்றி இயக்குநர் மில்கா எஸ்.செல்வகுமார் பேசும்போது, “இது ஒரு ஹாரர் படம். முழுக்க முழுக்க, ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக ‘சண்டி முனி’ உருவாகிறது.

நாயகன் நட்ராஜ்  ‘சண்டி’ என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார். நாயகி மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார்.

ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் கதாபாத்திரத்தில் நாயகன் நட்ராஜ் நடிக்கிறார். படத்தில் ஒவ்வொரு காட்சியுமே கமர்ஷியல் கலக்கலாக இருக்கும்…” என்றார்.

Leave a Response