ஹெச்.ராஜாவை கைது செய்ய ஆதாரம் இல்லை-துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய ஆதாரம் இல்லை என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த போது காவல்துறை மற்றும் நீதித்துறை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கீழ்த்தமாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து உயர்நீதிமன்றம் ஹெச்.ராஜா மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை கைது செய்யப்படவில்லை. ஆனால், முதல்வர் மற்றும் காவல் அதிகாரி ஆகியோரை விமர்சித்த கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே, கருணாஸை போல் ஹெச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தேனியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ் ” சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் கருணாஸ் பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

எனவே, ஹெச்.ராஜா குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ் “ஹெச்.ராஜாவுக்கு பேசியதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார்” என தெரிவித்தார். ஹெச்.ராஜா பேசியது வீடியோவாக வெளிவந்து வைரலாக பரவியது. கருணாஸ் பேசியதும் வீடியோவாகத்தான் வெளிவந்தது.

அப்படி இருக்க ஹெச்.ராஜா பேசியதற்கு ஆதாரம் இல்லை என ஓ.பி.எஸ் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response