மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் திடீரென இயக்கம் தொடங்கிய விஷால்..!

மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் விஷால், அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருபவர். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விஷாலை முன்மொழிந்த 10 பேரில் சிலரது நம்பகத்தன்மை பற்றி எதிர்ப்பு கிளம்பியதால், விசாரணை நடத்தப்பட்டது. அதில், சுமதி, தீபன் இருவர் விஷாலை முன்மொழியவில்லை என திடீரென கூறிவிட்டனர். வேட்புமனுவில் உள்ள கையெழுத்து எங்களது கையெழுத்து இல்லை என்று கூறினார்கள். இதையடுத்து உச்சகட்ட பரபரப்புக்கு பிறகு விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்பிறகு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார் விஷால். ஆனால் இப்போது திடீரென மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் அவர். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார். இப்போது விஷால், அதேபோன்ற ஒரு பெயரில், அமைப்பை துவங்கியுள்ளார்.

விஷால் துவங்கியுள்ள அமைப்பை கட்சியாக விரிவுபடுத்தி, களம் காண அவர் முயற்சி செய்யக்கூடும் என்று தெரிகிறது. ஏற்கனவே டிடிவி தினகரன், கமல்ஹாசன் போன்றோர் புதிதாக களத்தில் இறங்கியுள்ள நிலையில் விஷால் வருகை தமிழக அரசியலில் மற்றொரு பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Response