நான் முதல்வராக வந்தால் இதற்க்குத்தான் முதல் கையெழுத்து போடுவேன்-கமல்ஹாசன் அதிரடி..!

நான் முதல்வராக வந்தால் லோக்பால் மசோதாவுக்குத்தான் முதல் கையெழுத்து போடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஆர் கே சாலையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் திமுக தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு வந்தால் பங்கேற்பேன்.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வெறுமனே கூறி கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கான வளர்ச்சி இங்கு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வாருங்கள், சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.

அன்றாடம் செய்ய முடியாவிட்டாலும், 5 வருடத்திற்கு ஒரு முறையாவது அரசியலுக்கு வாருங்கள். மனிதர்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பவன் நான். அதனால்தான் அரசியலில் நுழைந்திருக்கிறேன்.

தற்போது கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதா வெறும் கண்துடைப்பே. எனவே நான் முதல்வரானால் முதல் கையெழுத்து லோக்பால் மசோதாவுக்குத்தான் போடுவேன்.

ஐ. ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மனிதனை மனிதன் கொன்று உண்ணும் பழக்கம் நின்று 10,000 ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. இது போன்ற சமூக சீர்கேடுகளை களைய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வோம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

Leave a Response