போராட்டம் குறித்து ரஜினியை நக்கல் அடித்த தினகரன்..!

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போதும் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியின் போதும் ரஜினி தெரிவித்த வெவ்வேறு கருத்துகளை தினகரன் நக்கல் அடித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேரணி சென்ற மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றிருந்தார்.

அப்போது ரஜினி பேசுகையில் தூத்துக்குடியில் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் சமூக விரோதிகள்தான், மக்கள் இல்லை என்றார். போராட்டம் நடத்தியதை சமூக விரோதம் என்று ரஜினி கூறியதாக எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகளா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்றார்.

இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினர் ரஜினியின் கருத்தை வரவேற்றாலும் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. எனினும் உயர்நீதிமன்றத்தில் போராடி திமுக வெற்றி கண்டது.

இந்நிலையில் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன் என்றார். அன்று ஒன்று பேசியுள்ளார் இன்று ஒன்று பேசுகிறாரே என்று விமர்சனத்துக்கு உள்ளானது.

இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் அமமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் தினகரன் பேசுகையில் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்காவிடில், நானே இறங்கி போராடி இருப்பேன் என்பவர், 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் போராட்டம் கூடாது என்றார். அவர் பேசியதை அவருக்கே அன்றும், இன்றும் என்று தொலைக்காட்சிகள் போட்டு காண்பிக்க வேண்டும் என்றார் தினகரன்.

Leave a Response