உலகமே தலைவர் என அழைத்தாலும் உங்களை அண்ணா என அழைத்தேன் : விஜயகாந்த் உருக்கமான அறிக்கை..!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று மாலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். கலைஞரின் மறைவு செய்தி கேட்டதும் அதிர்ச்சியான அவர் ஒரு வீடியோ வெளியிட்டார்.

ஆனால், அதில் பேச முடியாமல் அவர் அழுததே அதிகமாக இருந்தது. இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, உலகமே உங்களை கலைஞரே என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன்.

தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு என்பதன் அர்த்தத்தை ‘உழைப்பு’ என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே ! அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே! உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன்.

உங்களின் நினைவாக என்றென்றும்… தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற உங்கள் வாசகத்துடன்.

இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த். என அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response