காவேரி மருத்துவமனை வந்தார் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்..!

திமுக தலைவர் கருணாநிதிக்கு, காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 10ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிலையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கருணாநிதி பயன்படுத்தும் காரின் மூலம் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து தயாளு அம்மாள் வந்தார். அவருடன் மு.க.தமிழரசு, துரைதயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இன்று மாலை காவிரி மருத்துவமனைக்குச் வந்து கருணாநிதியின் உடல்நிலை பற்றியும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிய உள்ளார். கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் ராஜாத்தியம்மாள், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர் உள்ளனர்.

Leave a Response