சசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து:போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார்..!

சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் ஜெ. தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சமீபகாலமாக அரசியலிலிருந்து தீவிரமாக ஈடுபடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு தீபா வந்தார். அங்கு தாம் கொண்டு வந்திருந்த புகார் மனுவினையும் அளித்தார்.

அந்த மனுவில், அவர் தெரிவித்துள்ளதாவது:

“எனது அத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துக்களை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன். அவர்கள் மீது போலீசில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது.

அவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.

எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக்கு பலமுறை சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.

நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.” இவ்வாறு அதில் கூறி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தீபா, இதேபோல் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, தன் முகநூல் பக்கத்திலேயே நேரில் வந்து ஆபாசமான கருத்துகளை சசிகலா-தினகரன் ஆதரவாளர்கள் பதிவிடுவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Response