சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் “அகோரி”..!

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகி வருகிறது.  ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .
சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே கதை, இது ஒரு முழுமையான எண்டர்டெய்ன்ட்  படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான  வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாம் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில்  பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன்  நடித்த காட்சி படமாக்கப்பட்டது. மற்றும் இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன.
படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம்  புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர், இவர்  144 பட நாயகி. மைம் கோபி , சித்து,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், இவர்களுடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக் . நான்கு இசையமைப்பாளர்களின்  கூட்டணி இது., ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார்.
அண்மையில்  சென்னை  எம் ஜி.ஆர் பிலிம் சிட்டியில் அகோரிகள் புடை சூழ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நடிகர் சாயாஜி ஷிண்டே . இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் பேசும் போது , ” தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம் , வில்லன் ,நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கக் கேட்ட போது அவர்கள் சொன்ன கதை எனக்குப்  பிடித்திருந்தது.
இப்படத்தில் நான் ஓர்  அகோரியாக அதாவது சிவனடியாராக  நடிக்கிறேன். நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம்  ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியா க நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில்  குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அகோரி’ ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

Leave a Response