நடிகர் சங்க நிலத்தை விற்று பணம் கையாடல்: சரத்குமார், ராதாரவி மீது வழக்கு..!

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலைத்தை விற்று பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.செல்வராஜ், முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோர் அந்த நிலத்தை கடந்த 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று பணத்தை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் விஷால் குற்றம் சாட்டினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகாரும் அளித்தார். ஆனால் அவர் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விஷாலின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் கூறியுள்ள புகாரில் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சரத்குமார், ராதாரவி, கே.ஆர்.செல்வராஜ், நடேசன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Response