வரும் டிசம்பருக்குள் சட்டப்பேரவை தேர்தல்-துரைமுருகன் உறுதி..!

தமிழகத்தில், வரும் டிசம்பர் மாதத்தில், எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் ஒன்றாக நடைபெறும் என திருத்தணியில் நடந்த கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசினார்.

திருத்தணி நகர தி.மு.க. சார்பில் கலைஞர் கருணாநிதியின், 95 வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு கமலா திரையரங்கள் அருகே நடந்தது.

திருத்தணி நகர செயலாளர் எம்.பூபதி தலைமை வகித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் எஸ்.சந்திரன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் அமைச்சரும், காட்பாடி எம்.எல்.ஏவுமான துரைமுருகன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வேட்டி, சேலை, குடம் போன்ற பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கிப் பேசினார்.

தமிழக முதல்வர் சட்டசபையில், தமிழ்நாடு அமைதி பூங்கா என்றும், கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்கள் குறைந்துள்ளது என பேசுகிறார். ஆனால் என் தொகுதியான காட்பாடியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தற்போதும், பெண்கள் முந்தானையால் கழுத்து பகுதியை மூடிச் செல்கின்றனர். காரணம், செயின் திருடர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். வரும் டிசம்பர் மாதத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது உறுதி. அதை வேண்டும் ஆனால் குறித்துக் கொள்ளுங்கள் என்றார் அவர்.

Leave a Response