அணைகள் பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்பதா? ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம்..!

பாஜகவை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் ஸ்டாலின் உண்மை நிலையை அறிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதாவை விரைவில் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் அணைகளின் மீது மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரம் பறிக்கப்படும் என்று எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைக்கு எதிரானது என்றும், அணைகளின் உரிமையை மாநிலப்பட்டியலில் இருந்து பறிக்கும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் , அணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

அணைகள் பாதுகாப்பு மசோதா கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி அன்று தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2010 மசோதாவில் விரும்பும் மாநிலங்கள் மசோதாவை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருந்ததாக சொன்னாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஏனென்றால், முல்லைபெரியார் போன்ற 4 அணைகள் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கேரள மாநிலத்தில் உள்ளன என்பதும், கேரளா ஏற்றுக்கொண்டு தமிழகம் மறுத்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை கூட அறியாதவராக உள்ளார் ஸ்டாலின்.

அதே போல் 2010 மசோதாவில் அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பராமரிக்கும் என்ற ஷரத்தை நீக்கி, தற்போதைய 2018 மசோதாவில் பராமரிக்கும், உரிமை பெற்ற மாநிலங்களின் உரிமை பறிபோகாமல் காத்திருக்கிறது.

தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிப்பது ஒன்றையே கொள்கையாக கொண்டு அதிகாரத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு விமர்சனங்களை முன் வைப்பது நலம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response