ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆயிரம் டன் கந்தக அமிலம்.. கசிவு ஏற்பட்டால் என்னவாகும் ? நடுநடுங்கும் தூத்துக்குடி..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில் அந்த ஆலைக்குள் 1000 டன் கந்தக அமிலம் இருப்பது தெரிய வந்துள்ளது, நேற்று முன்தினம் திடீரென கந்தக அமில கசிவு ஏற்பட்டதால் அதிர்ந்த மாவட்ட நிர்வாகம் அதை அப்புறப்படத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த 1000 லிட்டர் கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என தூத்துக்குடி மககள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். நூறாவது நாளான கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 அப்பாவி மக்கள் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். . இதையடுத்து உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அது உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி தொடங்கியது. கந்தக அமிலத்தை டேங்கர் லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,

ஸ்டெர்லைட் ஆலையில் சுமார் 1,000 டன் கந்தக அமிலம் உள்ளது. இதனை முழுமையாக வெளியேற்ற ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து பணியாற்ற வேண்டி இருக்கிறது. இதனால் ஓரிரு நாட்களில் ஆலையில் இருந்து கந்தக அமிலம் முழுமையாக வெளியே கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளதாலும், அதனை அகற்றும் பணி நடந்து வருவதாலும் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆலை அமைந்து இருக்கும் பகுதியில் பொதுமக்களிடையே ஒருவித அச்சமும் ஏற்பட்டுள்ளது .

Leave a Response