தூத்துக்குடியையே எரிக்க முயற்சித்ததாக 3 வழக்கறிஞர்கள் மீது தேசதுரோக வழக்கு: முத்தரசன் பகீர்..!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது தூத்துக்குடி நகரத்தையே எரிக்க முயற்சித்ததாக 3 வழக்கறிஞர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என விமர்சித்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளியிட்ட அரசாணை போதுமானது அல்ல. தமிழக அரசு கொள்கை முடிவாக ஸ்டெர்லைட்டை மூடுவதாக அறிவிக்க வேண்டும். தூத்துக்குடியில் தற்போதும் போலீசாரின் கைது நடவடிக்கை தொடருகிறது. அங்கு பெண்களை படம்பிடித்து அச்சுறுத்துகிற நிலைமை தொடருகிறது.

அதுவும் தூத்துக்குடி நகரத்தையே எரிக்க முயன்றதாகவும் 3 வழக்கறிஞர்கள் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இத்தகைய அடக்குமுறையை அரசு கைவிட வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் அவரது குடும்பத்தினரே மன்னித்துவிட்டதால் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு கபட நாடகமாடுகிறது.

சேலம்- சென்னை 8 வழிசாலையானது விவசாயிகளைக் கேட்டுக் கொண்டு செயல்படுத்தவில்லை. ஆகையால் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Leave a Response