ரஜினிகாந்துக்கும், பா.ஜ.கவுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை – எச்.ராஜா..!

ரஜினிகாந்துக்கும், பா.ஜ,கவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

பிரதமர் மோடி அறிவுரையின்படி பா.ஜனதா அரசின் சாதனைகள் பற்றி அனைத்து தரப்பு மக்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் நேரில் எடுத்துரைக்க சென்று வருகிறேன். அவர்களை சந்தித்து பா.ஜனதா அரசின் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து வருகிறேன்.

26 கோடி மக்களுக்கு வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியது. ரூ.12-க்கு விபத்து காப்பீடு என பல்வேறு சாதனைகளை பா.ஜனதா அரசு செய்துள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முன்பு 9 கோடி வீடுகளில் கழிவறை வசதி கிடையாது. இப்போது பா.ஜனதா ஆட்சிக்கு பிறகு 7 கோடி வீடுகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நக்சலைட்டுகள் ஊடுருவிவிட்டனர். பொதுவாக மக்கள் போராட்டம் நடத்தும்போது அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் சமாதானம் அடைந்து கலைந்து சென்று விடுவார்கள். ஆனால், சமூக விரோதிகள் ஊடுருவலால் ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி போராட்டங்கள் பெரும் கவலையளிக்கும் விதமாக மாறிவிட்டது.

தூத்துக்குடி போராட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ரஜினிகாந்த் தனது கருத்தை தெளிவாக கூறினார். அதை அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து பேசுகிறார்கள். பா.ஜனதா சொல்லி தான் ரஜினிகாந்த் பேசுகிறார் என்று சிலர் கூறுகிறார்கள்.

ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. ரஜினிகாந்துக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கர்நாடகாவில் பா.ஜனதாவை ரஜினிகாந்த் எதிர்த்தார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Response