முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் முதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு- வைகோ அசத்தல் பேச்சு..!

முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் முதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு என வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆவேசமாகவும், ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்ற வைராக்கியத்துடனும் பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம்; முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு.

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான அணி 40 இடங்களை கைப்பற்றும். கருணாநிதியை சில நாட்களுக்கு முன் சந்தித்தபோது ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என்றேன்.

அந்த வகையில் திமுகவின் வெற்றிக்காக, ஸ்டாலினை முதல்வராக்க, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வேன். எந்த எதிர்பார்ப்புமின்றி ஸ்டாலினுக்கு மதிமுக துணை நிற்கும்.

தமிழக அரசை இயக்குவது மோடி தர்பாரும் ஆர்எஸ்எஸ் யும் தான். தற்போது வந்துள்ள இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் கனவு கோட்டையை தூள் தூளாக்கி விட்டது. இவ்வாறு வைகோ பேசினார்.

நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் குதித்துள்ள நிலையில் வைகோவின் இந்த பேச்சு அவர்களை மறைமுகமாக சாடுவதாக கருதப்படுகிறது.

Leave a Response