அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாமல் தனியார் பள்ளிகளுக்கு நிதி-தமிழக அரசை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக அரசின் நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் தேனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமாலா வரவேற்றார். மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு மற்றும் பலர் பங்கேற்று பேசினார். தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் பணி நிரவலை முழுமையாக கைவிட வேண்டும்.

1997–ஆம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்ட ஆசிரியர் – மாணவர் விகிதம் 1:20 என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளை வளர்க்கவும், அரசுப் பள்ளிகளை மூடவும் வழி வகுத்துள்ள கல்வி உரிமை சட்டத்தின் மூலம் தமிழக அரசின் நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்.

ஒளிவு மறைவற்ற வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில் நன்றி தெரிவித்தார்.

Leave a Response