‘விசுவாசம்’ ஷூட்டிங் ஆரம்பம் : ஐதராபாத் சென்ற அஜித்-வைரலாகும் புகைப்படம்..!

அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்திருக்கும் ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது.  வீரம், வேதாளம், விவேகம்  ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்தை இயக்குகிறார் சிவா.

கடந்த நவம்பர் மாதம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு அப்போதே அதிகாரப்பூர்வமாக ‘விசுவாசம்’ என டைட்டில் வைக்கப்பட்டது. வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிவா திரைக்கதைப் பணிகளை முடிக்காததால் பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்பட்டது. பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குவதாக தகவல் வெளிவந்த நிலையில் அப்போதும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

மார்ச் மாதத்தில் தமிழ் திரையுலக ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டதால் படங்களின் ஷூட்டிங் பணிகள் தவிர்க்கப்பட்டன. அப்போதே ஐதராபாத்தில் ‘விசுவாசம்’ படத்திற்கு செட் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் நடத்த தயாரிப்பாளர்கள் அனுமதி கேட்க, அஜித்தே திரையுலக ஸ்ட்ரைக் நேரத்தில் ஷூட்டிங் வேண்டாம் எனச் சொன்னதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஷூட்டிங் எப்போதுதான் தொடங்கும் என அஜித் ரசிகர்கள் இயக்குநர் சிவா மீது அதிருப்தி கொண்டிருந்தனர். மற்ற படங்களின் இயக்குநர்கள் தொடர்ந்து அப்டேட் வழங்கிக்கொண்டிருக்க இவர் மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்பதாகக் குற்றம் சாட்டினர்.

தற்போது இன்று முதல் ஐதராபாத்தில் ‘விசுவாசம்’ ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதற்காக, நேற்று அஜித் விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். ஐதராபாத் ஷூட்டிங்குக்குப் பிறகு மும்பையில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

அஜித் ஐதராபாத் செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது இசையமைப்பாளர் தமன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அஜித் விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகி செம வைரலாகி வருகின்றன.

நான்கு மாதங்களாக தள்ளிப்போய்க்கொண்டிருந்த ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகவும் குஷியாகியுள்ளனர்.

Leave a Response