டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்..!

நெல்லை அருகே கடுமையான வறுமையில் தனது தந்தை நாள்தோறும் குடித்துவிட்டு வருவதால் மனமுடைந்த மகன் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை அடுத்த குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் 12ம் வகுப்பு முடித்துள்ள மாணவரான இவரின் தந்தை, கடந்த சில ஆண்டுகளாக மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தினேஷ் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் அவர்களின் குடும்பமும் வறுமையில் கஷ்டப்பட்டுள்ளது. அதோடு தினேஷ் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாஸ்மாக் கடை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அந்த கடிதத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

அப்படியும் டாஸ்டாக் கடைகள் மூடப்படவில்லை என்றால் ஆவியாக வந்து டாஸ்டாக் கடைகளை அழிப்பேன் என தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளார்.

இதே போல் தனது தந்தைக்கும் தினேஷ் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தனது சாவுக்குப் பிறகாவது தனது தந்தை குடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் தினேஷ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவர் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நீட் தேர்வை எதிர்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் மகனுக்கு ஏற்படுத்திய அதிக பாதிப்பால் அவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response