செப்டம்பர் மாதம் உங்களிடம் நன்றாக பேசுவேன்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சட்டசபை தேர்தலில் 12 சதவீத வாக்குகளை பெற்று, சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர் விஜயகாந்த். ஆனால், அதன்பின், தேமுதிக இறங்கு நிலையை சந்தித்தது. மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்து, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக டெபாசிட் இழந்தது.

மேலும், உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் விஜயகாந்த் ஒதுங்கியே இருந்தார். செய்தியாளர்கள் முன்னிலையில் நினைத்ததை பேசமுடியாமல் சிரமப்பட்டார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் “பாஜக அரசு மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. அதை எதிர்த்துதான் இந்த பேரணியை நடத்தினோம். உடல் நிலை காரணமாக என்னால் சரியாக பேசமுடியவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த பின் செப்டம்பர் மாதம் உங்களிடம் நன்றாக பேசுவேன்” எனக் கூறினார். விரைவில் அவருக்கு சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை பிரேமலதா செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

Leave a Response