மான் வேட்டை வழக்கு – சல்மான் கானிற்கு ஜாமீன்

மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சல்மான் கான், சயீப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் சிலர் கடந்த 1998ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளாக கழித்து நேற்று தீர்ப்பு வெளியாகியது.

இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும், மற்றவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பை அளித்தார். மேலும், சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை போலீசார் ஜோத்பூர் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரி அவரது சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

இந்நிலையில் சல்மான் கானின் ஜாமீன் மீதான மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சல்மான் கானிற்கு ஜானீன் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சல்மான் கானிற்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி இன்று திடீர் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response