2ஜி வழக்கில் கடந்த 21ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பிற்கு பின் ராசா நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்று இருந்தார்.
அங்கு அவருக்கு திமுக தொண்டர்களால் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் மேட்டுப்பாளையத்தில் மக்கள் முன்னிலையில் 2ஜி வழக்கு குறித்து பேசினார்.
அதில்
“இந்த 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று சித்தரித்தார்கள். இதை பற்றி பேசி, பேசி இரண்டு முறை எங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார்கள். மன்மோகன் சிங் நல்ல ஆட்சி நடத்தினார். ஆனால் இதனால் அவரும் பாதிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்” என்று குறிப்பிட்டார்.
மேலும் ”ஆனால் மன்மோகன் சிங்கிற்கும் இந்த வழக்கு குறித்து புரியவில்லை. என்னை கைது செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் எதுவுமே சரியாகவில்லை. அதனுடைய விளைவை அவரே கடைசியில் அனுபவித்தார்” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
”பார்வையற்றவர்கள் யானையை தடவி அதன் உருவத்தை விவரித்தது போல் மத்திய புலனாய்வு அமைப்பும் , உச்சநீதிமன்றமும் 2ஜி வழக்கை கையாண்டு இருக்கிறது” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.