சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பரவலாக பண விநியோகம் நடைபெறுகிறது என்று குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. இதனால் தீவிரமாக களம் இறங்கி சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகளை கட்சியினரும் மக்களும் சூழ்ந்து கொண்டு நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை ஆர்கே.நகர் தொகுதியில் உள்ள வ.உ.சி. நகரில், வெளிப்படையாக பண விநியோகம் செய்த நபர் ஒருவரை போலீஸார் பிடித்துச் சென்றனர். கட்டுக் கட்டாகப் பணத்துடன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வந்த அந்த நபரை, போலீஸார் கையுடன் பிடித்துக்கொன்டு, அழைத்துச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அந்த நபர் யார், எந்தக் கட்சிக்காக பணம் கொடுத்து வந்தார் என்றெல்லாம் கூறப்படாத நிலையில், தொடர்புடைய நபரை மட்டும் அந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இதனால், கட்சியினர் கொதிப்படைந்தனர். போலீஸார் தாங்கள் அழைத்துச் சென்ற நபர் யார், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், எந்தக் கட்சிக்காக பண விநியோகத்தில் ஈடுபட்டார் என்ற விவரத்தைக் கூற வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, போலீஸாருக்கு உதவியாக துணை ராணுவப் படையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். ஆர்.கே.நகரில் பதற்றம் ஏற்பட்ட பகுதியிகளில் துணை ராணுவப் படையினர் அணிவகுப்பும் நடத்தினர்.
முன்னதாக, ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் பணம் அதிமுக.,வினரால் வழங்கப்பட்டு வருவதாக, திமுக., வேட்பாளர் மருது கணேஷ் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதே போல், திமுக., மற்றும் தினகரன் தரப்பினர் இதே போல் பண விநியோகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தொகுதியில் பரவலாக பணம் விநியோகிக்கப் படுவதாக, பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசையும் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறி, சாலை மறியலிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.