அணு ஆயுதம், ஏவுகணை திட்டங்களை தொடருவதால் வடகொரியாவுக்கு அழுத்தம் தருகிற வகையில், ஜப்பான் நேற்று புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
இதற்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
ஆனாலும் வடகொரியா தனது அணு ஆயுத, ஏவுகணை திட்டங்களில் உறுதியாக இருப்பதால் அந்த நாட்டுக்கு எதிராக சர்வதேச நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், வடகொரியாவுக்கு மேலும் அழுத்தம் தருகிற வகையில், ஜப்பான் நேற்று புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஜப்பான் அரசின் தலைமைச்செயலாளர் யோஷிஹிடே சுகா வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது, “ செப்டம்பர் மாதம் வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பான் மீது பாய்ந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு அந்த நாட்டின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே வடகொரியாவுக்கு மென்மேலும் அழுத்தம் தருகிற வகையில் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.
இதன்படி வடகொரியாவின் 19 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன.
வங்கிகள், நிலக்கரி மற்றும் தாது வர்த்தகர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவை ஜப்பான் தடையினால் பாதிப்புக்கு ஆளாகும்.