மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த அமர் (எ) அமரேஷ். இவர் மீது கொலை, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று நண்பகலில் அமரேஷ், அரசுப் பேருந்து மதுரை சென்று கொண்டிருந்தார். பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த மர்ம கும்பல் அமரேஷ் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழி மறித்து நிறுத்தியது.
பேருந்துக்குள் புகுந்த அவர்கள், அமரை கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு, தங்களது வாகனங்களில் ஏறி தப்பியது. இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்த அமர், பேருந்திற்குள்ளேயே உயிரிழந்தார். கொலை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்தப்படி, பேருந்திலிருந்து இறங்கி ஓடினர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அமரேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொலையாளிகள் பயன்படுத்திய கார், மதுரை அருகே அச்சம்பத்து பகுதியில் நின்று கொண்டிருந்தது. காரை நிறுத்திவிட்டு, கொலையாளிகள் வேறு வாகனத்தில் தப்பியிருக்கலாம் என்றும், கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.