கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலால் வரலாறு காணாத அளவு அந்த மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்ச் சேதம், பொருள்சேதம், குடியிருப்புகள் சேதம் என மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை, வாழை, ரப்பர் மரங்களை இழந்தவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என்று கூறி 13-ம் தேதி விவசாயிகள் தக்கலையில் வட்டாட்சியர் அலுவகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
அதில் சுமார் 2000 பேர் திரண்டு சாலை மறியல் செய்ததால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சப் -கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகாததால், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் தக்கலைக்கு வந்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்தியபின் விவசாயிகள் கலைந்துசென்றனர்.
கலெக்டரிடம், தங்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால் 15-ம் தேதி மாவட்டம் தழுவிய பந்த் நடத்தப் போவதாகக் கூறினர். இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிந்ததும் நேற்று நள்ளிரவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் பதற்றமானது. பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. காலை முதல் கடைகள் வணிக நிறுவனங்கள் திறக்கவில்லை. பஸ்கள் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. பல வழித்தடங்களில் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தழுவிய பந்துக்கு பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க என பல்வேறு கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதால் மாவட்டம் முழுவதும் பதற்றமாக காணப்படுகிறது.