கேரளாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவி ஜிஷா. இவர் பெரும்பாவூர் அருகே வட்டோலிப்படி என்ற இடத்தில் தனது வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். ஜிஷாவின் அந்தரங்க உறுப்புகளும் சிதைக்கப்பட்டிருந்தன. இச்சம்பவம் கேரளாவையே உலுக்கியது. வழக்கு விசாரணை தாமதமாக நடப்பதாக கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது அப்போதைய காங்கிரஸ் அரசை கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின.
தேர்தலில் இடதுசாரி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. ஏடிஜிபி சந்தியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் தீவிர விசாரணை செய்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அமீருல் இஸ்லாம் என்பவரை கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் கைது செய்தனர்.
வழக்கு விசாரணையில் 100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலீஸ் தரப்பில் 290 ஆவணங்களும் 36 ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்து எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அமீருல் இஸ்லாம் குற்ற வாளி என நீதிமன்றம் உறுதி செய்தது.