‘ரியல் ஹீரோ பெரியபாண்டி’! – விஷால் புகழாரம்

3eb42354d8435f5cae123e7eab598db4

ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி உண்மையான ஹீரோ என்று நடிகர் விஷால் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக நாதுராம், தினேஷ் சௌத்ரி என்கிற இருவரைப் பிடிக்க ராஜஸ்தானுக்கு தமிழகப் போலீஸார் தனிப்படை அமைத்துச் சென்றிருந்தனர். ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்தவர்களைப் பிடிக்க, தமிழக போலீஸார் முயன்றனர். அப்போது, இரு தரப்புக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்து, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டிமீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பெரியபாண்டியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில், “கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் உண்மையான ஹீரோ. பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக தன் உயிரைத் தியாகம் செய்திருக்கிறார். அவருடைய துணிவுக்கு நான் தலைவணங்குறேன். அவருடைய உயிரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Leave a Response