ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க இன்னும் 6 மாத காலம் கூடுதல் அவகாசம் கோரி விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுக சாமி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் அதிமுகவிலிருந்து அப்போது பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியினரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். கடந்த ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி, படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பட்டிருந்தது. அதுதொடர்பான சந்தேகத்தை எழுப்பி திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான தனி நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அமைத்தது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு விசாரணை ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு அளித்த அவகாசம் வரும் 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆனால், ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், திமுகவை சேர்ந்த சரவணன், மருத்துவர் பாலாஜி, அரசு மருத்துவர்கள் ஆகியோரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க கூடுதலாக 6 மாத கால அவகாசம் கோரி விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுக சாமி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்