இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி நாள் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இலங்கை வீரர்களின் விக்கெட்டை எடுக்க இந்தியா நிறைய முயற்சிகள் செய்து வந்தது. முக்கிய பவுலர்கள் பலரும் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வந்தனர். கோஹ்லி, முரளி விஜய் ஆகியோர் கூட பவுலர் அவதாரம் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளுக்கு 299 ரன்கள் எடுத்த போது ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.ரோஹித் 65 ரன்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.முதல் இன்னிங்சில் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது. இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் 164 ரன்கள் எடுத்தார்.இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 373 ரன்கள் எடுத்து இருக்கிறது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. தவான் 67 ரன்களும், கோஹ்லி, ரோஹித் தலா 50 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது.
இலங்கை அணிக்கு இந்தியா 409 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி இலங்கை நிதானமாக ஆடியது. இலங்கை வீரர் தனஞ்செயா 119 ரன்கள் எடுத்தார். ரோஷன் சில்வா 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இலங்கையின் விக்கெட்டை இந்திய பவுலர்கள் விரைவாக எடுக்க தவறிவிட்டனர். இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளுக்கு 299 ரன்கள் எடுத்த போது ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் ஏற்கனவே முதல் போட்டி டிராவில் முடிந்து இருந்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று கைப்பற்றி உள்ளது.