ஜெ.தீபாவுக்கு சம்மன்! ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவு!

x04-1512391669-deepa323.jpg.pagespeed.ic.ivTdPiB5OK

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஜெ.தீபா வரும் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 13 ஆம் தேதி அன்று தீபா ஆஜராவார் கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. சென்னை எழிலகத்தில் உள்ள கலச மஹாலில் இயங்கி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு  60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த சரவணன், ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பின்னர், டாக்டர்கள் ஆஜராகினர். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்களில் 27 பேர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன்னையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, ஜெ.தீபா வரும் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார். தீபா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களுக்கான மூல ஆவணங்களைக் கொண்டு வருமாறும் தனிநபர் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

Leave a Response