இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் முதன்மை ரோலில் நடித்துள்ள படம் வேலைக்காரன். அனிரூத் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது…
தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவுடன் படம் பண்ண வேண்டும் என்று நானே அவரிடம் கேட்டேன். அவரை ரீ-மேக் பட இயக்குநர் என கிண்டல் செய்தார்கள். ரீ-மேக் படம் பண்ணுவது சாதாரண விஷயம் இல்லை. எனக்கும் கூட பத்து ரீ-மேக் பட வாய்ப்புகள் வந்தன, ரொம்ப கஷ்டம் என்பதால் அதை மறுத்து விட்டேன். ரஜினி சார் பட தலைப்பில் நடிக்க யோசித்தேன். ஆனால் படத்திற்கு பொருத்தமான தலைப்பு என படம் பார்க்கும்போது நீங்கள் உணர்வீர்கள். பகத் பாசில் ஒரு சர்வதேச நடிகர், அவர் இந்தப்படத்தில் நடிப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை. எதிர்நீச்சல் படத்துக்கு சம்பளம் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார் நயன்தாரா.
அதன்பிறகு வேலைக்காரன் ஷூட்டிங்கில் தான் அவரை சந்தித்தேன். அவரின் தன்னம்பிக்கை தான் அவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது. அனிருத் இல்லைன்னா சிவகார்த்திகேயன் இல்லைனு டுவிட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மை, அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறீங்க, அதை எப்படி திருப்பி கொடுப்பேன்னு தெரியல. ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு இந்த வேலைக்காரன். நான் விளம்பரங்களில் நடிப்பதில்லை, இந்த படத்தில் நடித்த பிறகு விளம்பரங்களில் இனி நடிக்கவே மாட்டேன் என முடிவெடுத்திருக்கிறேன். 9 படம் பொழுதுபோக்குக்கு நடித்தால், ஒரு படம் மக்களுக்கு அறிவை புகட்டும் படமாக இருக்கும்.
முழுக்க கதையை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம் வேலைக்காரன்.இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.