மருத்துவர் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 10,000 செவிலியர்களுக்கு இதுவரை பணி நிரந்தர ஆணை வழங்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு தொகுப்பு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் திங்கட்கிழமை காலையில் இருந்தே அதிக அளவில் அந்தப் பகுதியில் செவிலியர்கள் கூடியதால் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்த அவர்கள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை செவிலியர்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களோடு அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, செவிலியர்கள் புதன்கிழமை முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், இதுவரை விடுமுறை எடுத்ததற்கு காரணம் கேட்டும் பொதுசுகாதாரத்துறை செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பதிலளிக்கத் தவறினால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.