இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவின் மதுசூதனன் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
அ.தி.மு.க. கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும் தினகரன் தரப்பு குற்றம் சாட்டியது.
இரட்டை இலைச்சின்னம், கட்சி, கொடி ஆகியவை ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு வழங்கப்பட்டதால் தினகரன் அணியைச் சேர்ந்த பலர் ஓபிஎஸ் அணிக்கு தாவுவார்கள் என கூறப்பட்டது,
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் ஓபிஸை ரகசியமாக சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபக், திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் ரகசியமாக அர்ச்சனை தட்டு, பிரசாதங்கள் சகஜமாக ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியும், சின்னமும் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிக்கு கிடைத்துள்ளதால் சசிகலா அணியில் இருந்து தற்போது தீபக் எதிரணிக்கு மாறியுள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகும் சசிகலா சிறைக்கு சென்ற பிறகும் அவர்களது குடும்பத்துக்கே ஆதரவாக இருந்தார் தீபக். ஆனால் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.