கார்த்தி சிதம்பரம், டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 10 நாள்கள் இங்கிலாந்தில் தங்கியிருக்க சில நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தர, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதன்பின்னர் டெல்லி, குருகிராம், மும்பை, சண்டிகர் உட்பட கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய 13 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. ஆனால், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து, அவருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி, கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தனது மகளின் மேற்படிப்பு சம்பந்தமாக இங்கிலாந்துக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தி ருந்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அவர் இங்கிலாந்தில் இருக்க அனுமதி வழங்கியுள்ளது. 10-ம் தேதி அவர் திரும்பி வரவில்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.