டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு, சட்டப் பேரவை வளாகத்துக்குள் குட்கா கொண்டுவந்த விவகாரத்தில் உரிமைக் குழு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு பெற்ற வெற்றி செல்லாது என்று கூறி தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட ஏழு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அதில் வாதிட்ட டி.டி.வி.தினகரன் வழக்கறிஞர்:-
‘நமிக்கை வாக்கெடுபின்போது ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ-க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், எங்கள் அணி எம்.எல்.ஏ-க்கள் 18 தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் கொறடாவின் உத்தரவை மீறி செயல்படவில்லை’ என்று வாதிட்டார். உரிமைக்குழு நோட்டீஸ் மீதான தடையை நீக்க வேண்டும். தடை உள்ளதால் அடுத்தகட்டமாக எதுவும் செய்ய முடியவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. டி.டி.வி.தினகரன் தரப்பு வாதம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அதுவரை, தனிநீதிபதி பிறப்பித்த தடை உத்தரவு தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.