மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை, நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை அழித்துவிட்டது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
ஒரு ஆண்டு நிறைவு:
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டு, ஊழலை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர்8-ந்தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானபின் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சரிந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி நேற்றோடு ஒரு ஆண்டு நிறைவடைந்தது. இந்த ரூபாய் நோட்டு தடை குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘ தி பைனான்சியல் டைம்ஸ்’ நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது-
ரிசர்வ் வங்கியின் கருத்தைக் கேட்காமல், புறந்தள்ளிவிட்டு, தான்தோன்றித்தனமாக பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடையை கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதனால் நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்ந்திருக்கும் துறை, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தை துடைத்து அழித்துவிட்டது’.
வளர்ச்சி நம்பிக்கை சிதைந்தது:
மோடியின் ரூபாய் நோட்டு தடை முடிவு என்பது, இந்தியா பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சியைப் பெறும் என்ற நம்பிக்கையை துடைத்து எறிந்து விட்டது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 2 சதவீதத்தை ரூபாய் நோட்டு தடை குறைத்துவிட்டது. அமைப்பு சாரா தொழில்துறையையும், சிறு, குறு வர்த்தகத்தையும் ரூபாய் நோட்டு தடை துடைத்து எடுத்துவிட்டது.
15லட்சம் பேர் வேலையிழப்பு:
இதன்மூலம், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை அழித்துவிட்டார் மோடி. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, 15 லட்சம் தொழிலாளர்கள் ரூபாய் நோட்டு தடை கொண்டு வரப்பட்ட 4 மாதங்களில் வேலை இழந்துள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர். ரூபாய் நோட்டு தடை என்பது, அவசர கோலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, மோசமாக திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் பொருளாதாரத்தின் மீது இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லைசன்ஸ் ராஜ்ஜியம்:
நவீனகால ‘லைசன்ஸ் ராஜ்’ஜியத்தை உருவாக்கி, கடும்கட்டுப்பாடுகளை விதித்து, அரசு அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை இந்த ரூபாய் நோட்டு தடை காலம் வழங்கியது.
சீனா உற்பத்தித்துறையில் மிகப்பெரிய முனையாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியா இதை சவாலாக எடுத்துக்கொண்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தகத்துக்கு அதிகமான அதிகாரங்களை, சலுகைகளை வழங்க வேண்டும்.
இந்த துறைகளுக்கு அவசரமாக அதிகாரங்களை வழங்கி, அவற்றை தலைநகரத்துடன், தொழில்நுட்பத்துடன் இணைப்பது அவசியம். இவ்வாறு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, மோடி அரசு, ரூபாய் நோட்டு தடை, புதிய வரி மூலம் அழித்துவிட்டது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.